Published : 19 Sep 2021 03:32 PM
Last Updated : 19 Sep 2021 03:32 PM

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்குப் பரிசுப் பொருட்கள்: பள்ளப்பட்டி பேரூராட்சி அறிவிப்பு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு அறிவித்துள்ள பரிசுகள் விவரம் அடங்கிய துண்டுப் பிரசுரம்.

கரூர்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குக்கர், ஹாட் பாக்ஸ், டிபன் கேரியர், தட்டு ஆகியவை பள்ளப்பட்டி பேரூராட்சி சார்பில் பரிசாக வழங்கப்பட உள்ளன.

கரூர் மாவட்டத்தில் இன்று (செப்.19) 624 இடங்களில் மாபெரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. இதில், அரவக்குறிச்சியில் 165 முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், பள்ளப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 10 இடங்களில் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்குப் பள்ளப்பட்டி பேரூராட்சி சார்பில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், பள்ளப்பட்டி பேரூராட்சியில் உள்ள 10 தடுப்பூசி மையங்களில் ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு தலா முதல் பரிசாக 1 குக்கர், 2-ம் பரிசாக ஹாட் பாக்ஸ், 3-ம் பரிசாக டிபன் கேரியர் மற்றும் 25 ஆறுதல் பரிசுகளாக உணவருந்தும் தட்டுகள் வழங்கப்படுகின்றன. தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன்பும், செலுத்திக்கொண்ட பின்பும் அசைவ உணவு அருந்தத் தடையில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று (செப்.19) தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் நாளை (செப்.20) காலை பள்ளப்பட்டி பேரூராட்சியில் வைக்கப்பட்டுள்ள 10 பெட்டிகளில் எந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ அதற்கான பெட்டியில் ஒப்புகைச் சீட்டை அலுவலக நேரத்துக்குள் செலுத்த வேண்டும். ஒவ்வொரு முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்ட 28 பேர் வீதம் 280 பேர் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் வந்து பரிசுகளைப் பெற்றுச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x