Last Updated : 19 Sep, 2021 12:39 PM

 

Published : 19 Sep 2021 12:39 PM
Last Updated : 19 Sep 2021 12:39 PM

புதுச்சேரியில் வட்டாட்சியர், செயல்துறை நடுவர்கள் வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரம்: ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் வட்டாட்சியர் மற்றும் செயல்துறை நடுவர்கள் வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை அளிக்கும் அமைச்சரவையின் முடிவுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கடந்த 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை வந்த முக்கியக் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, இந்திய மருத்துவ முறை, ஹோமியோபதி துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு, சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு (அலோபதி) இணையாக தொகுப்பூதிய விகிதத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்துவதற்கான திட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதேபோல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்டாட்சியர் மற்றும் செயல்துறை நடுவர்களுக்கும், மாஹே, ஏனாம் பகுதிகளில் துணை வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள துணை வட்டாட்சியர் மற்றும் செயல்துறை நடுவர்களுக்கும் வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை அளிக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இது வாரிசு சான்றிதழ்கள் பெறுவதற்காக நீதிமன்றங்களை அணுகும் பொதுமக்களின் சிரமங்களையும், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதையும் குறைக்கும். விடுமுறைக் கால மற்றும் பேரிடர் கால நிவாரணம் மற்றும் நல உதவி திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 2,216 மீனவக் குடும்பங்களுக்கு ரூ.5,500 வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவி வழங்க இரண்டாவது தவணை நிதிக்கொடையாக ரூ.1.21 கோடி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். இத்தகவலை ஆளுநரின் செயலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x