Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

21 கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு கிராம மக்கள் வலியுறுத்தல்

சென்னை

தூத்துக்குடியில் 21 கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி வசிக்கும் மக்கள்சார்பாக வழக்கறிஞர் எம்.ஜெயம்பெருமாள் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் அதைச் சுற்றியுள்ள மீளவிட்டான், மடத்தூர், பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியாபுரம், அய்யனடைப்பு, சில்லாநத்தம், தெற்கு சிலுக்கன்பட்டி, சாமிநத்தம், சில்வர்புரம், டி.வி.புரம், புதூர் பாண்டியாபுரம் உள்ளிட்ட 21 கிராம மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் மழை பொய்த்துவிட்டதால் விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாகமாறிவிட்டன. அதனால் சென்னை, கோவை, பெங்களூரு, மும்பை எனமக்கள் வேலை தேடிச் சென்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை வந்த பிறகு,உள்ளூரிலேயே வேலை கிடைத்துபொருளாதார ரீதியாக முன்னேறிவந்த நிலையில், சில அமைப்புகளின் விரும்பத்தகாத செயல்களால்ஆலை மூடப்பட்டது. அதன் காரணமாகவும், கரோனா ஊரடங்காலும்வறுமையின் பிடியில் சிக்கியுள்ளோம். இந்த ஆலையை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி 1 லட்சம் பேர் வாழ்ந்தனர். ஆலையை மூடி 3 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமுதல்வர், தலைமைச் செயலர், அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏக்கள், எதிர்கட்சித் தலைவர், சம்பந்தப்பட்ட துறை செயலர்களிடம் மனு கொடுத்துள்ளோம்.

ஆலையைத் திறப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரைவில் நல்ல முடிவெடுக்கும் என்று நம்புகிறோம். இதுதொடர்பாக 21 கிராம மக்களிடம் அரசுகருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி,முடிவு எடுக்கலாம். ஆலையைத்திறக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். இல்லாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 21 கிராமமக்களிடம் ஆலோசித்து அறிவிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x