Published : 19 Sep 2021 03:14 AM
Last Updated : 19 Sep 2021 03:14 AM
சென்னையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு மாதத்துக்குள் தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, மெரினா கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் நேற்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் மாநகராட்சிஆணையர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வீடுகளில் ஒருவருக்கு தொற்று இருந்தால் மற்றவருக்கும், பயணம், இல்லநிகழ்வுகள், மதம் சார்ந்தநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது முகக்கவசம் அணியாமல் இருப்பதாலும், தொற்று அதிகமாகப் பரவுவது தெரியவந்துள்ளது.
எனவே, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.
1,600 இடங்களில் முகாம்
இது தொடர்பாக சென்னை மாநகரம் முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,600 இடங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில், சுமார் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோவேக்சின், ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
முதல் தவணை போட்டுக்கொள்வோருக்கு கோவிஷீல்டும், இரண்டாவது தவணை கோவேக்சின் போடவேண்டி இருப்போருக்கு மட்டுமே கோவேக்சின் தடுப்பூசியும் போடப்படும். அடுத்த ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள, 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT