Published : 18 Sep 2021 07:45 PM
Last Updated : 18 Sep 2021 07:45 PM

தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் நாளை மீண்டும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கடந்த 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. குறிப்பாக, கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100 சதவீதத் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் 40 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டன. அன்று ஒரே தினத்தில் சுமார் 25 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தினர்.

இந்நிலையில் நேற்று (17-ம் தேதி) தமிழகத்தில் இரண்டாவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக இருந்தது. தடுப்பூசி குறைவாக இருப்பதாலும், மத்திய அரசிடம் இருந்து போதிய தடுப்பூசிகளைப் பெறும் பணி நடைபெற்றதாலும் அந்த முகாம் நாளை (19-ம் தேதி) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது. வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், கல்வித்துறை, யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றன. முன்பு போலவே காலை 7 மணிக்குத் தொடங்கும் தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x