Published : 18 Sep 2021 06:18 PM
Last Updated : 18 Sep 2021 06:18 PM

உள்ளாட்சித் தேர்தல்; விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து அனுப்புக: அமமுக அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களைப் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து அனுப்புமாறு அமமுக கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக, அமமுக தலைமைக் கழகம் இன்று (செப். 18) வெளியிட்ட அறிவிப்பு:

"தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது வருவாய் மாவட்டங்களிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவி இடங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இத்தேர்தலில் அமமுகவின் சார்பில் பல்வேறு பதவி இடங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கோரும் அமமுக உடன்பிறப்புகள் மேற்கண்ட வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட அமமுக மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்களைப் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து திரும்ப அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட அமமுக செயலாளர் உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்து வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான முழு விவரங்களையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு அமமுக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x