

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று, தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின், 2017 செப்டம்பர் 12-ல் நடத்திய பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் பதவியைக் கலைத்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எனப் புதியதாக இரு பதவிகளை உருவாக்கியதாக மனுவில் கூறியுள்ளார்.
மேலும், பொதுச் செயலாளருக்கான அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சி விதிப்படி, புதிய பதவிகளை உருவாக்கப் பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென்பதால், இது சம்பந்தமாக கட்சி விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை ஏற்றுத் தேர்தல் ஆணையம் 2018 மே 4-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணத்தின்போது அமலில் இருந்த விதிகளைப் பின்பற்ற அதிமுக தலைமைக்கு உத்தரவிடத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு திங்கள் கிழமை (செப். 20) தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.