Published : 18 Sep 2021 03:53 PM
Last Updated : 18 Sep 2021 03:53 PM

டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (செப்.18) வெளியிட்ட அறிவிப்பு:

"வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் 12 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 11 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை".

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x