Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

குறு, சிறு தொழில் நிறுவனங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

குறு, சிறு தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான ‘லகு உத்யோக் பாரதி’ அமைப்பின் மாநில இணை பொதுச் செயலாளர் எம்.சிவகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான அமைப்பாக ‘லகு உத்யோக் பாரதி’செயல்பட்டு வருகிறது. கரோனா ஊரடங்கு காலத்தில் குறு, சிறுதொழில்கள் நலிவடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலகங்களைப் பொலிவுறச் செய்ய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் 13 பரிந்துரைகளை ‘லகு உத்யோக் பாரதி’ வழங்கியது.

கடந்த 13-ம் தேதி சென்னை வந்திருந்த நிர்மலா சீதாராமனை ‘லகு உத்யோக் பாரதி’ நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர். சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்புமிகவும் பயனுள்ளதாக இருந்தது.குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான பிரச்சினைகள், குறைகளை அவர் பொறுமையாக கேட்டறிந்தார்.

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரையறையில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்களால் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட அலகுகள் குறுந்தொழில்கள் பிரிவில் வருகின்றன. திறமையான சுயதொழில் செய்பவர்கள், மிகக் குறைந்த இயந்திர முதலீடு, மனிதவளத்துடன் இத்தொழில்கள் நடைபெறுகின்றன. கரோனா ஊரடங்கால் இத்தொழில்களும், அவர்களது குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், குறு, சிறு தொழில்நிறுவனங்களுக்கான பாதுகாப்பு, விதிமுறைகள், வங்கி சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து நிதி அமைச்சரிடம் கூறப்பட்டது. அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், குறு,சிறு தொழில் நிறுவனங்களுக்கான குறைகளைத் தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x