Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை ஆராய்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

சென்னை

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை ஆராய்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் விழிப்புணர்வு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து மனநல பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களால் நடத்தப்படவுள்ள ரிவைவ் அடுமனையை திறந்து வைத்தார். சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை இயக்குநர் பி.பூர்ணசந்திரிகா, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் காலத்தில் மனநல மருத்துவமனையை தரம் உயர்த்தி, மனநல ஆராய்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மருத்துவமனை வளாகத்தில் வேளாண்மை துறையுடன் இணைந்து விவசாயம் செய்யப்படும். தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு தற்கொலையால் 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரையும், விபத்துகளால் 11 ஆயிரம் முதல் 12 வரையும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

தற்கொலை செய்து கொள்பவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே தூக்குப்போட்டு தற்கொலை செய்கின்றனர். மற்றவர்கள் எலி மருந்து,பால்டாயில், சானி பவுடர் போன்றவற்றை சாப்பிட்டு தற்கொலைசெய்து கொள்கின்றனர்.

சானி பவுடரை விஷம் கலந்தபவுடராக மாற்றி விற்பனை செய்கின்றனர். அதில் விஷத்தின் அளவு அதிகமாக உள்ளதால், அதனை சாப்பிடுபவர்களை காப்பாற்றவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தற்கொலை எண்ணிக்கையை குறைப்பதற்கானநடவடிக்கையாக, சானிபவுடரை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், பால்டாயில், எலி மருந்து ஆகியவற்றை கடைகளில் மறைமுகமாக விற்கவேண்டும். வெளிப்படையாக விற்க கூடாது. மேலும், அதனை தனிநபர் யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. 2 நபருக்கு மேல் சேர்ந்து வந்து கேட்டால் மட்டுமே கடைகளில் விற்பனை செய்ய என வணிகர்களுக்கு அறிவுறுத்தும் அரசாணைகள், துறையின் அலுவலர்கள் மூலம் விடுக்கப்படும். கரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்காதது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x