

கண்ணமங்கலம் அருகே கார் மீது காவல் துறையின் வாகனம் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.
தி.மலை மாவட்டம் செங்கம் சிவன் கோயில் தெருவில் வசித்தவர் ராமச்சந்திரன்(60). இவரது மனைவி சரஸ்வதி(55). இவர்களது மகன் ராம்குமார்(25). இவர்கள் மூன்று பேரும், செங்கத்தில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிக்கு பேரன் பிறந்தநாளை கொண்டாட காரில் நேற்று காலைபுறப்பட்டனர். காரை, செங்கம் அடுத்த கிளையூர் கிராமம் கீழ்தெருவில் வசிக்கும் செல்வழகன்(27) என்பவர் ஓட்டினார்.
கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணமங்கலம் அருகே அழகுசேனை ஏரிக்கோடி பகுதியில் கார் சென்றது. அப்போது,வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற காவல்துறையின் வாகனம் எதிரே வந்தது. அதனை காவலர் பெரியசாமி(47) ஓட்டி வந்துள்ளார். சாலையின் வலது திசையில் காவல்துறை வாகனம், அதன் ஓட்டுநர் ஓட்டி சென்றார். அதி வேகமாக சென்ற காவல்துறை வாகனம், கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரஸ்வதி உயிரிழந்தார். இதையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ராமச்சந்திரன், ராம்குமார், செல்வழகன் ஆகியோர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் உயிரிழந்தார்.
மேலும், காவல்துறை வாகனத் தில் பயணம் செய்த 8 பேருக்கும், காரில் பயணித்த 2 பேர் என 10 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு தனியார் மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்த கூடுதல் எஸ்பி அசோக்குமார் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப் போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, காவல்துறை வாகனம் வேகமாக சென்று கார் மீது மோதுவது தெரியவந்தது.
இதுகுறித்து கண்ணமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.