Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM

அரக்கோணம் அருகே காஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ரூ.3.92 லட்சம் பணம் திருட்டு

அரக்கோணம் அருகே ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ரூ.3.92 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் 2 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரில் தனியார் பொறியியல் கல்லூரியின் எதிரில் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் காஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திடிருச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த தகவலின்பேரின் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், காவல் ஆய்வாளர் சேதுபதி உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும், இரண்டு தனிப்படை களை அமைத்து மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த ஏ.டி.எம் மையம் பாதுகாப்பு குறை வாக உள்ள பகுதியாக உள்ளது. இந்த ஏ.டிஎம் மையத்தில் கண் காணிப்பு கேமரா வசதியும் இரவு நேர பாதுகாவலரும் இல்லை.

இரு தினங்களுக்கு முன்பு ரூ.8 லட்சம் அளவுக்கு பணத்தை நிரப்பியுள்ளனர். தற்போது, ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 900 பணம் திருடு போயி ருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. காஸ் வெல்டிங் கருவியை பயன் படுத்தி இயந்திர பெட்டியை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த மையத்தை இரண்டு, மூன்று முறை நோட்டம் விட்டிருப்பார்கள் என்பதால் ஏற்கெனவே பதிவாகியுள்ள கேமரா காட்சிகளையும் அருகில் உள்ள தனியார் கட்டிடங்களில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளில் மர்ம நபர்கள் வந்து சென்ற காட்சி பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வரு கிறது’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x