Published : 17 Sep 2021 05:10 PM
Last Updated : 17 Sep 2021 05:10 PM

சமூக நீதி நாள்; சனாதனக் கோட்பாட்டுக்கு எதிரான எச்சரிக்கை: திருமாவளவன்

சமூக நீதி நாள், சனாதனக் கோட்பாட்டுக்கு எதிரான எச்சரிக்கை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர்-17, இனி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும். அத்துடன், இந்நாளில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட யாவரும் 'சமூக நீதி நாள் உறுதிமொழி' ஏற்பார்கள்.

இதனைத் தமிழக முதல்வர் செப்டம்பர்- 06 அன்று சட்டப் பேரவையில் பெருமிதம் பொங்க அறிவித்தார். அவர் பெரியாரின் பாசறையில், அண்ணாவின் அரவணைப்பில், கலைஞரின் வழிகாட்டுதலில் சமூக நீதிக் கொள்கை ஈர்ப்பால் வளர்ந்த 'திராவிட வார்ப்பு' என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

அத்துடன், இந்த அரசு 'பெரியார் அரசு அல்லது சமூக நீதி அரசு' என்பதை ஊருக்கு- உலகுக்கு உரத்துச் சொல்லும் புரட்சிகரமான அறிவிப்பாகும். இது சனாதன- பழமைவாத - சமூக நீதிக்கு எதிரான பிற்போக்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் துணிகரமான நிலைப்பாடாகும். தமிழக முதல்வரின் இந்தக் கொள்கைத் துணிவை விசிக சார்பில் நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.

கடந்த ஆண்டுகளில் பெரியாரின் பிறந்த நாளைச் சமூக நீதி நாளாகக் கொண்டாடி வருகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்கிற முறையில், அதிகாரபூர்வமாக எமது கோரிக்கை நிறைவேறியிருக்கிறது என்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியால் இறும்பூது எய்துகிறோம். பெரியாரின் வாழ்நாள் போராட்டம் சமூக நீதிக்காகவே என்பது யாவருமறிந்த ஒன்றாகும். அவரின் எழுத்தும் பேச்சும் இயங்கிய மூச்சும்; அவர் செலவிட்ட ஒவ்வொரு நொடியும் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் விளிம்புநிலை மக்களுக்கான சமூக நீதிக்காகவே என்பது ஊரறிந்த - உலகறிந்த ஒன்றாகும்.

"பெரியார் என்றால் சமூக நீதி; சமூக நீதி என்றால் பெரியார்" எனக் காலத்தால் அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு அவர் சமூக நீதியின் வடிவமாகவே விளங்கியவர்; இயங்கியவர். அத்தகைய பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது ஒரு தனி நபரைப் போற்றிப் புகழ்ந்து கூத்தாடுவது என்றாகாது; மாறாக, சமூக நீதி எனும் உயரிய கோட்பாட்டை உயர்த்திப் பிடித்துக் களமாடுவதே ஆகும்.

அதாவது, சமூக நீதியைக் கூர்மைப்படுத்திச் செழுமைப்படுத்துவதற்கான, மேன்மேலும் அதனை வலிமைப்படுத்துவதற்கான அளப்பரிய வாய்ப்பை வழங்கும் கொண்டாட்டமாகவே இது அமையும். பெரியார் என்றால் கடவுள் மறுப்பு, பார்ப்பன வெறுப்பு என்றெல்லாம் அடையாளப்படுத்துவோருக்கு இடையில், அவரைச் சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான அடையாளமென நிலைப்படுத்துகிற தமிழக அரசின் இந்தப் புரட்சிகர நடவடிக்கை போற்றுதலுக்குரியதாகும்.

சமூக நீதி என்பது கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமையாய்ப் பெறுகிற இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இது சமத்துவத்தை வென்றெடுக்கும் ஜனநாயக வழியிலான அறப்போருக்குரிய கருத்தியல் பேராயுதமாகும். அதாவது, சமத்துவ இலக்கை எட்டுவதற்கான நெறிமுறை ஜனநாயகமென்றால், அத்தகைய ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையே சமூக நீதியாகும்.

இத்தகைய சமத்துவத்தை இலக்காகக் கொண்டு சமரசமின்றி இறுதிவரை சமர் புரிந்த பெரியார், சமத்துவத்தின் நேர்ப் பகையான சனாதனத்தை வெகுமக்களிடையே அடையாளப்படுத்துவதையும் அம்பலபடுத்துவதையுமே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு ஓய்வின்றி, சலிப்பின்றிக் களமாடினார்.

சனாதனம்தான் அவரது ஒரே பகை! சனாதனத்தை வேரறுப்பதுதான் அவரது ஒரே குறிக்கோள்! சனாதனத்தை வேரறுத்து வீழ்த்தாமல் சமத்துவத்தை வென்றெடுக்க இயலாது என்பதை உணர்ந்ததால்தான், அவர் சனாதன சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை அம்பலப்படுத்துவதிலேயே மிகவும் தீவிரமாக இருந்தார். சனாதன எதிர்ப்பிலிருந்துதான் பார்ப்பன எதிர்ப்பும் கடவுள் எதிர்ப்பும் உத்திகளாக அமைகின்றன.

பிறப்பின் அடிப்படையில் மனிதருக்கிடையில் உயர்வு- தாழ்வைக் கற்பித்து அதனை நிலைப்படுத்திய கோட்பாடுதான் சனாதனம். இந்தப் பாகுபாட்டுக்கு அவரவரின் முன்வினை அல்லது முற்பிறப்பின் வினை என்னும் கர்மாவே காரணமென்றும் அவற்றை இறைவனே தீர்மானிக்கிறான் என்றும் கொள்கைகளை வரையறுத்து அவற்றைப் பரப்பி, அதனால் இன்றுவரை பயன் துய்ப்பவர்கள் பார்ப்பனர்களே என்று அவர்களை அடையாளப்படுத்தியதும் அம்பலப்படுத்தியதும் பெரியார்.

ஆகவேதான் அவர் மீது எதிர்வினையாகத் தொடர்ந்து வெறுப்பை உமிழ்கின்றனர். உண்மைகளைத் திரித்து அவர் இந்து மக்கள் யாவருக்குமான எதிரி என அவதூறு பரப்புகின்றனர். அதாவது, பார்ப்பன சமூகத்தின் நீண்டகால உழைப்புச் சுரண்டலைத்தான் அம்பேத்கரும் பெரியாரும் தமது இறுதி மூச்சுவரை எதிர்த்தனர். ஆனாலும், பெரியாரைக் குறிவைத்து அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவதூறுகளை அள்ளி இறைத்து வருகின்றனர்.

ஆரியர் அல்லது பார்ப்பன ஆதிக்க சக்திகளின் இத்தகைய பெரியார் எதிர்ப்பே, காலப்போக்கில் திமுக எதிர்ப்பாகவும் திராவிட அரசியல் எதிர்ப்பாகவும் விரிவடைந்துள்ளது. திமுகவை அதன் தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து விமர்சிப்பது என்பது வேறு; அதன் சமூக நீதிக் கோட்பாட்டு அரசியலிலிருந்து விமர்சிப்பது என்பது வேறு. அடிப்படையில், அவர்கள் சமூக நீதி எதிர்ப்பிலிருந்தே பெரியாரையும் பெரியார் எதிர்ப்பிலிருந்தே திமுக மற்றும் திராவிட அரசியலையும் எதிர்க்கிறார்கள்.

இந்நிலையில்தான் தமிழக அரசு பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என அறிவித்துள்ளது. இது சனாதனத்துக்கு எதிராக சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு கோட்பாட்டு யுத்தமே ஆகும்.

எனவே, இன்று எனது அறைகூவலையேற்று சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் இந்த கோட்பாட்டு அறப்போரில் களமிறங்கி உறுதிமொழியேற்ற என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் யாவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன்”.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x