Last Updated : 17 Sep, 2021 01:56 PM

 

Published : 17 Sep 2021 01:56 PM
Last Updated : 17 Sep 2021 01:56 PM

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அச்சு இயந்திரம் இடமாற்றம்

அச்சு இயந்திரத்தைப் பார்வையிடும் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன்.

தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சொந்த உபயோகத்துக்காக 39 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட அச்சு இயந்திரம், பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு பிரத்யேகக் கட்டிடத்தில் சிறப்பாக இயங்குவதால் பல்கலைக்கழகத்தினர் பெருமிதம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் கடந்த 1981-ம் ஆண்டு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான வ.அய்.சுப்பிரமணியம் என்பவர் தமிழின் ஆராய்ச்சி நூல்கள், தொலைநிலைக் கல்விக்கான நூல்களையும், பல்கலைக்கழகப் பதிப்பு நூல்களையும் தாமே அச்சிட வேண்டும் என்ற குறிக்கோளோடு கடந்த 1982-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் அச்சு இயந்திரத்தை வரவழைத்து அரண்மனை வளாகத்தில் நிறுவினார்.

தொடந்து பல்கைக்கழகப் பதிப்புத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஏராளமான நூல்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 25.5.1990-ம் ஆண்டு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி சாலையில் 1,000 ஏக்கர் பரப்பரளவில் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது அங்கு இயங்கி வருகிறது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்.

ஆனால், அரண்மனை வளாகத்தில் நிறுவப்பட்ட அச்சு இயந்திரத்தை இடமாற்றம் செய்தால், அந்த இயந்திரம் மறுபடியும் செயல்படாத நிலைக்குச் சென்றுவிடும் எனக் கூறப்பட்டதால், இதுவரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 12 துணைவேந்தர்களும் அச்சு இயந்திரத்தை இடமாற்றம் செய்யும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டனர்.

இந்நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிப்புத்துறை, விற்பனைத்துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடங்களில் நிரந்தரப் புத்தக விற்பனைக்கு ஏற்பாடும் செய்யப்பட்ட நிலையில், பதிப்புத்துறைக்குத் தேவையான அச்சு இயந்திரத்தை இடமாற்றம் செய்வது எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் உறுதியாகச் செயல்பட்டார். இதையடுத்துப் புதிய கட்டிடத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அச்சு இயந்திரம் ரூ.7 லட்சத்து 5 ஆயிரம் செலவில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு அதன்படி இடமாற்றம் செய்யப்பட்டது.

புதிய வளாகத்தில் நிறுவப்பட்ட அச்சு இயந்திரம் மீண்டும் பொருத்தினால் செயல்படாது எனக் கூறிய நிலையில், தற்போது அந்த இயந்திரம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் பெருமிதம் அடைகின்றனர்.

இதுகுறித்து பதிப்புத்துறை இயக்குநர் பேராசிரியர் தியாகராஜன் கூறுகையில், ”ஜெர்மன் நாட்டிலிருந்து 39 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுப் பல்கலைக்கழக நூல்கள் அச்சிடப்பட்டு வந்தன. அரண்மனை வளாகத்திலிருந்து இடமாற்றம் செய்யப் பலரும் தயக்கம் காட்டிக் கைவிட்ட நிலையில், தற்போதைய துணைவேந்தர் இதில் துணிந்து செயல்பட்டதால் அச்சு இயந்திரத்தைப் புதிய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பல வண்ணங்களில் அச்சிடப்படும் இந்த இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும்.

இந்த அச்சு இயந்திரத்தில் தற்போது பல்கலைக்கழகத்தின் நூல்கள் அனைத்தும் அச்சிடத் தயாராக உள்ளோம். இந்தப் புதிய பதிப்புத்துறை கூடத்தையும், அச்சகத்தையும் முதல்வர் திறந்துவைக்க அவரது கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x