Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM

அடுத்த 4 நாட்கள் பரவலாக மழை பெய்யும்: வடதமிழகத்தில் செப்.19-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகத்தில் 19-ம் தேதி மிகக் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

17-ம் தேதி தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

18-ம் தேதி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கன மழையும், தென் மாவட்டங்கள், டெல்டாமாவட்டங்கள் மற்றும் காரைக்கால்பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யும்.

19-ம் தேதி வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமுதல் மிகக் கன மழையும், ஏனையமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x