Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM
சென்னை அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகத்தில் பலஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பைகளை அகழ்ந்தெடுத்து, அப்பகுதியை மீட்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிபதி பி.ஜோதிமணி அறிவுறுத்திஉள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 6 முதல் 10 வரையிலான மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், திடக்கழிவு மேலாண்மைக்கான மாநில கண்காணிப்பு குழுத் தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கூவம் கால்வாயின் பக்கவாட்டில் உள்ளகுப்பைகளை அகற்றி அப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலனைக் காத்திடவும், கோடம்பாக்கம் மண்டலம், தியாகராயநகர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள காய்கறிசந்தையில் வியாபாரம் செய்துவரும் பெண்களின் வேண்டுகோளுக்கிணங்க அப்பகுதியில் ஏற்கெனவே அமைந்திருந்து இடிக்கப்பட்ட கழிப்பறைக்கு பதிலாக புதிதாக மாற்றுக் கழிப்பறை கட்டித்தரவும் உத்தரவிட்டார்.
மேலும், அண்ணாநகர் மண்டலம், பழைய மத்திய தார் கலவை நிலையத்திலுள்ள தினசரி 100 டன் மக்கும் கழிவுகளை பயன்படுத்தி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தை பார்வையிட்டார். அம்பத்தூர் மண்டலம், அத்திப்பட்டு குப்பைக் கொட்டும் வளாகத்தில் பயோ மைனிங் முறையில் நிலத்தை மீட்டெடுக்கும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ளதிடக்கழிவு மேலாண்மை துறையின் உள்கட்டமைப்பு வசதிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணியில் வீடுவீடாக சென்று வகை பிரிக்கப்பட்ட குப்பைகள் பெறப்படுவதை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, மத்திய வட்டார துணை ஆணையர் ஷரண்யா அரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT