

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் உடன் இருந்தனர்.
தமிழகத்தின் 25-வது ஆளுநராகஅவருக்கு உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி 18-ம் தேதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
முன்னதாக, தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.என்.ரவி பின்னணி
ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பிஹாரில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம், சில காலம் பத்திரிகைத் துறை பணி என இருந்தவர் கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஆகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். உளவுத்துறையிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளைத் தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார்.
பின்னர் அவர் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.