Last Updated : 16 Sep, 2021 01:13 PM

 

Published : 16 Sep 2021 01:13 PM
Last Updated : 16 Sep 2021 01:13 PM

221-வது முறையாக வேட்பு மனுத்தாக்கல் செய்த பத்மராஜன்

 புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்யும் பத்மராஜன். | படம்: சாம்ராஜ்

புதுச்சேரியின் தேர்தல் மன்னன் பத்மராஜன் 221-வது முறையாக புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் இன்று சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். தேர்தலில் தான் தோற்றால் மகிழ்ச்சி எனவும் தெரிவித்த அவர், இதுவரை தேர்தலில் வைப்புத்தொகைக்காக ரூ.50 லட்சம் வரை செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் கே.பத்மராஜன். தொடக்கத்தில் பஞ்சர் கடை நடத்திய இவர், பின்னர் சிறிய டயர் தொழிற்சாலைக்கு உரிமையாளர் ஆனார். பத்மராஜன் கடந்த 1988-ம் ஆண்டு முதல் பல தேர்தல்களில் வேட்புமனுத் தாக்கல் செய்வது வழக்கம். குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, நகராட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களவைத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் வரைப் பல்வேறு தேர்தல்களில் பல முறை போட்டியிட்டுள்ளார்.

ஆனால், எதிலும் அவர் வெற்றி பெற்றதில்லை. தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். தற்போது 62 வயதாகும் இவர் 1988-ம் ஆண்டு முதல் 33 ஆண்டுகளாகத் தோல்வியை அறிந்தே வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார். இதுவரை ஐந்து குடியரசுத் தலைவர் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். வேட்புமனுத் தாக்கலுக்காகவே லிம்கா, கின்னஸ் புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளார். இதனால் தேர்தல் மன்னன் பத்மராஜன் எனவும் அழைக்கப்படுகிறார்.

மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர்த்துப் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் பத்மராஜன் 221-வது முறையாக புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். சுயேச்சை வேட்பாளராக பத்து எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். ஆனால், அவருக்கு யாரும் முன்மொழிந்து கையெழுத்திடவில்லை. அதனால் அவரது வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு அதிகம். பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் தொகை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பத்மராஜன், ''வாழ்வில் தோல்வியும் முக்கியம். தோல்வியடைவேன் என்று அறிந்தேதான் வேட்புமனுத் தாக்கல் செய்கிறேன். வெற்றி ஒரு நாளில் முடிந்துவிடும். அதே நேரத்தில் தோல்வி மிக முக்கியம். நம்மை வழிநடத்தும். தேர்தலில் நான் தோற்றால் மகிழ்ச்சி. தொடர்ந்து போட்டியிட்டு அதையே சாதனையாக மாற்றியுள்ளேன். இதுவரை ரூ.50 லட்சம் வரை வைப்புத் தொகைக்காகச் செலவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x