Published : 16 Sep 2021 12:48 PM
Last Updated : 16 Sep 2021 12:48 PM

வருமானத்துக்கு அதிகமாக 654% சொத்து சேர்ப்பு: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப் பதிவு

வேலூர் சேண்பாக்கத்தில் அதிமுக பிரமுகர் ஜெபிரகாஷ் வீட்டில் சோதனை செய்ய செல்லும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார்.

வேலூர்

முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்துள்ள வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கே.சி.வீரமணி (57). இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை முன்னாள் பள்ளிக்கல்வி, சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சி, விளையாட்டு மேம்பாடு மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் தேவராஜிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இவர், கடந்த 1-4-2016 முதல் 31-3-2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 654% அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்த்துள்ளதாக, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் நேற்று (செப். 15) வழக்குப் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் நபர்கள் என, 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இன்று (செப். 16) காலை 7 மணியளவில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் கொத்தமாரி குப்பம் கிராமத்தில் சோதனை நடைபெற்று வரும் பாலார் வேளாண் கல்லூரி.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 இடங்கள், வேலூர் மாவட்டத்தில் 4 இடங்கள், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஒரு இடம், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் குருவிமலை கிராமத்தில் 2 இடங்கள், சென்னையில் 4 இடங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 1 இடம் உள்ளிட்ட 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

குருவிமலையில் சோதனை நடைபெற்று வரும் கே.சி.வீரமணியின் உறவினர் வீடு.

வழக்குப் பதிவு விவரம்:

கே.சி.வீரமணியின் குடும்பம் உயர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தனது சகோதரர்கள் கே.சி.அழகிரி, கே.சி.காமராஜ் ஆகியோருடன் பீடித் தொழில் நடத்தி வந்தனர். 'அகல்யா டிரான்ஸ்போர்ட்' என்ற பெயரில் டிப்பர் லாரிகள் உள்ளன. கே.சி.வீரமணிக்கு மேகலை, பத்மாசினி என இரு மனைவிகள். இதில், பத்மாசினி கடந்த 2016-ம் ஆண்டு இறந்துவிட்டார்.

கடந்த 1-4-2016 கணக்கின்படி கே.சி.வீரமணி மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் சொத்து மதிப்பு கடந்த 1-4-2016ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ.25 கோடியே 99 லட்சத்து 11 ஆயிரத்து 727 ஆக இருந்து. இது 31-3-2021 நிலவரப்படி ரூ.56 கோடியே 60 லட்சத்து 86 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது. சொத்து மதிப்பு வித்தியாசம் ரூ.30 கோடியே 61 லட்சத்து 74 ஆயிரத்து 858 ஆகும்.

கே.சி.வீரமணியின் எம்எல்ஏ சம்பளம் மற்றும் தொழில் வருவாய் மூலம் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து மதிப்பு ரூ.28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 758 ஆக உள்ளது. இது 654 சதவீதம் அதிகம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 2016 முதல் 2021 காலகட்டத்தில் அவர் பெயரிலும் அவரது தாயார் மணியம்மாள் (80) பெயரிலும் சொத்துகள் வாங்கியுள்ளார். திருமண மண்டபம், ஏலகிரி மலையில் ஓட்டல் மற்றும் ஓசூரில் நட்சத்திர ஓட்டல், வேலூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி என, ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஜோலார்பேட்டையில் கே.சி.வீரமணி வீட்டின் முன்பாக குவிந்துள்ள அதிமுக தொண்டர்கள்.

போலீஸ் குவிப்பு:

ஜோலார்பேட்டையில் சோதனை நடைபெற்று வரும் கே.சி.வீரமணியின் வீட்டின் முன்பாக, அதிமுகவினர் ஏராளமானவர்கள் குவிந்துள்ளனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் திமுகவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x