Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM

கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் கோயிலின் 5 அறங்காவலர்களை தற்காலிக பதவி நீக்கம் செய்து அறநிலையத் துறை கடந்த மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்ட அறங்காவலர்களில் ஒருவரான ஆடிட்டர் ஸ்ரீதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நேற்றுபிறப்பித்துள்ள உத்தரவில், அறநிலையத் துறையால் அறங்காவலர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றக் குறிப்பாணை செல்லும். அதேநேரம் மனுதாரருக்கு எதிரான தற்காலிக பதவி நீக்க உத்தரவு மட்டும் ரத்து செய்யப்படுகிறது. மற்ற 4 பேருக்கு எதிராகபிறப்பிக்கப்பட்ட பதவி நீக்க உத்தரவுக்கு ஏற்கெனவே இந்நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அறங்காவலர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி விசாரணையை தொடரலாம். விசாரணையை விரைந்து முடிக்க அறங்காவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அதேசமயம், கோயில் நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக அபகரித்திருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும்.மேலும் கோயில் நிலங்களை அபகரிப்பவர்கள், அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும். அந்த சிறப்பு பிரிவின் தொலைபேசி எண், மொபைல்எண்களை அனைத்து கோயில்கள்,அறநிலையத் துறை அலுவலகங்களில் பக்தர்கள் புகார் அளிக்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x