அரசு விழா, நிகழ்ச்சிகளில் சைவ உணவு மட்டுமே வழங்க வேண்டும் : உயர் நீதிமன்றத்தில் கருணை சபை வழக்கு

அரசு விழா, நிகழ்ச்சிகளில் சைவ உணவு மட்டுமே வழங்க வேண்டும் : உயர் நீதிமன்றத்தில் கருணை சபை வழக்கு
Updated on
1 min read

அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் சைவ உணவு மட்டுமே வழங்க வேண்டும் என்று அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை உத்தங்குடி கருணை சபை நிர்வாகி இ. ராமலட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழகத்தில் அரசு விழா மற்றும் நிகழ்ச்சிகளில் அசைவ உணவு பரிமாறக் கூடாது என்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநருக்கு 2012-ல் மனு அனுப்பினேன். அதன்படி அரசு விழா மற்றும் நிகழ்ச்சிகளில் சைவ உணவு மட்டுமே பரிமாற வேண்டும் என்று 2013, மார்ச் 12-ல் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் எனக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தார்.

ஆனால், 2013, நவ. 13-ல் சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் அசைவ உணவு பரிமாறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. அரசின் கொள்கை முடிவை பொறுப்பான பதவியில் உள்ள அதிகாரிகள் பின்பற்றாதது வேதனையாக உள்ளது. பொது விழாவில் அசைவ உணவு பரிமாறப்படுவது சைவத்தில் நம்பிக்கை உள்ளவர்களை துன்புறுத்துவதுபோலாகும்.

எனவே, அரசு விழாவில் சைவ உணவு பரிமாற வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவு குறித்து அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும், சுற்றறிக்கையை செயல்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர். சுப்பையா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசிடம் விவரம் பெற்று நீதிமன்றத்துக்குத் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in