Published : 15 Sep 2021 09:30 PM
Last Updated : 15 Sep 2021 09:30 PM

புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது எப்படி?- முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை 

அரசுத் துறை செயலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த மே 11, 12 தேதிகளிலும், ஜூன் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலும் நடைபெற்றது. இரண்டாம் கூட்டத்தொடர் ஆக.13-ம் தேதி தொடங்கி செப்.13-ம் தேதி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தொடர் ஆளுநர் உரையாற்றிய நாளையும் சேர்த்து மொத்தம் 28 நாட்கள் நடைபெற்றது. பேரவையில் ஜூன் 21-ம் தேதி ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் பதிலுரை 3 நாட்கள் நடைபெற்றது.

2021-22ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாக ஆக.13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் முதன்முறையாக வேளாண் பட்ஜெட் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கைகள் மீதான பொது விவாதமும், பதிலுரையும் 4 நாட்கள் நடைபெற்றது.

மானியக் கோரிக்கை மீது 17 நாட்கள் விவாதம் நடைபெற்றது. 12 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அரசினர் சட்ட மசோதாக்கள் 30 வரப்பெற்றன. அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. மூன்று அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் 10 அறிக்கைகள் வாசித்தார்.

சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள், மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அரசுத் துறை செயலர்களுடன் நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை காலை 11.30 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. அனைத்துத் துறை சார்ந்த செயலாளர்களும் இதில் கலந்துகொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x