Published : 15 Sep 2021 06:07 PM
Last Updated : 15 Sep 2021 06:07 PM

சென்னைப் பல்கலை.யில் 'சமூக நீதி' பாடம்; அரசியல் நோக்கம் இல்லை: துணைவேந்தர் கௌரி

சென்னை

சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக சமூக நீதி என்னும் பாடம் அடுத்த கல்வியாண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என்று துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சமூக நீதி என்னும் பாடம் சோஷியாலஜி எனப்படும் சமூகவியல் படிப்பவர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்தப் பாடத்தை மாணவ, மாணவிகள் அனைவரும் விருப்பப் பாடமாக ஏற்றுப் படித்தால் சமுதாயத்தில் அவர்கள் சிறந்த குடிமக்களாக வாழ முடியும். அதற்கு இந்தப் பாடம் வழிவகுக்கும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு இந்தப் பாடத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலமாக இளங்கலை மாணவ, மாணவியர்கள் இந்தப் பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். 2021- 2022ஆம் கல்வி ஆண்டில் இருந்து இந்தப் பாடம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அமலுக்கு வரும்.

சோஷியாலஜி படிக்கும் மாணவர்கள் சமூக நீதிப் பாடத்தைப் படிக்கின்றனர். அவர்களுக்குக் கிடைக்கும் அறிவும், அனுபவமும் மற்ற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பாடத்தை அறிமுகம் செய்திருக்கிறோம். மற்றபடி இதில் எந்த ஒரு அரசியல் நோக்கமும் கிடையாது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் திராவிட ஆய்வு மையம் மேம்படுத்தப்படும்'' என்று துணைவேந்தர் கெளரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x