Published : 15 Sep 2021 04:58 PM
Last Updated : 15 Sep 2021 04:58 PM

கரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பது மகிழ்ச்சியான செய்தி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை

கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இல்லாமல் கட்டுக்குள் இருப்பது மகிழ்ச்சியான செய்தி என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன அழுத்தம் போக்கும் ஆலோசனை 104 சேவை மையம் மூலம் வழங்கும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (செப்.15) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"108 ஆம்புலன்ஸ் சேவை இந்தியாவிலேயே தமிழகத்தில் மிகச் சிறப்பாக இயக்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 1,303 வாகனங்கள் மூலம் மிகச் சிறப்பான மருத்துவ சேவை செய்யப்படுகிறது. 2008-ம் ஆண்டு செப்.15-ம் நாள் முதல்வராக இருந்த கருணாநிதியால் 13 ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்று. 104 மருத்துவ சேவை கரோனா பேரிடர் காலத்தில் எந்த வகையில் உபயோகமாக இருந்தது என்பதை அனைவருமே அறிவோம். 104 மருத்துவ சேவை எண்ணைப் பயன்படுத்தினால் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இன்று முதல் 104 மருத்துவ சேவைக்குக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இனிமேல் கூடுதலாக 104 சேவையைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். ஒட்டுமொத்தமாக எல்லா மாணவர்கள் மீதும் கவனம் செலுத்துவதற்கான முயற்சிதான் இது.

17-9-2021 அன்று நடைபெற இருந்த மாபெரும் கோவிட் - 19 தடுப்பூசி முகாம், 19-9-2021 ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. காரணம் தடுப்பூசி குறைவாக உள்ளதால் மத்திய அரசிடமிருந்து போதிய தடுப்பூசி பெறும் பணி பொது சுகாதாரத்துறை மூலம் நடைபெறுகிறது. தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். சென்ற வாரம் தடுப்பூசி முகாமின்போது பல்வேறு இடங்களில் தடுப்பூசி காலியாகிவிட்டது என்று எனக்கே 100-க்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்தன. அந்த நடைமுறைச் சிக்கலைச் சரிசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். தடுப்பூசி தேவைகளுக்கு ஏற்ப வழங்கும் பணி, மாவட்ட வாரியாகக் கணக்கெடுத்து அனுப்பும் பணி நடைபெறும்.

சென்ற வாரம் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றபோது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை சென்றேன். இந்த வாரம் கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன். சென்ற வாரம் நடந்த தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு வைத்து ஆரம்பித்தோம். 28.91 லட்சம் தடுப்பூசிகள் ஒரேநாளில் செலுத்தினோம். இந்த வாரம் அதேபோல் 20 லட்சம் இலக்கு வைத்துச் செயல்பட உள்ளோம். மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசி கேட்டுள்ளோம். தடுப்பூசி வரப்பெறுவது குறித்து செலுத்துபவர்களின் எண்ணிக்கை அமையும். கரோனா வழிமுறைகள் தேர்தலில் கடைப்பிடிக்கப்படும். அதற்குரிய கூட்டத்தை இன்று தேர்தல் ஆணையமும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் நடத்துகின்றன.

கரோனா ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி நடைபெறுகிறது. துல்லியமான கரோனா பாதிப்பு கணக்கு வெளியிடப்படுகிறது. அதனால்தான் ஒருநாள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,500-லிருந்து 2 ஆயிரத்துக்குள் மாறி மாறி வருகிறது. ஆக மொத்தம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இல்லாமல் கட்டுக்குள் இருப்பது மகிழ்ச்சியான செய்தி.

தமிழகத்தில் கோவிட்-19 முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 52 சதவிகிதம், செலுத்தாதவர்கள் 48 சதவிகிதம். 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்துவதற்குத் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 6 கோடியே 6 லட்சம். அவர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால், தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 12 கோடியே 12 லட்சம். தடுப்பூசி இதுவரை செலுத்தியவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 9 லட்சம்.

கடந்த வாரம் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 28.91 லட்சம் தடுப்பூசி செலுத்தியதால் தடுப்பூசி செலுத்தியவர்கள் சதவிகிதம் 45 சதவிகிதத்திலிருந்து 52 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆகையால், இதுபோன்ற மாபெரும் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் முதல்வர் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து நடைபெறும்.

இதுவரை தமிழகத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் 4 லட்சத்து 33 ஆயிரத்து 981 பேருக்கும், பாலூட்டும் தாய்மார்கள் 3 லட்சத்து 41 ஆயிரத்து 837 பேருக்கும், ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 142 மாற்றுத்திறனாளிகளுக்கும், 2 ஆயிரத்து 223 ஆதரவற்றோருக்கும், ஆயிரத்து 754 மனநலம் பாதிக்கப்பட்டோருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x