Published : 15 Sep 2021 03:26 PM
Last Updated : 15 Sep 2021 03:26 PM

புதுவை மாநிலங்களவைத் தேர்தல்: நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமையில்லை

புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில், நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை இல்லை என்று சட்டத்துறை தெரிவித்துள்ளது.

புதுவை மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. புதுவையில் உள்ள 30 எம்எல்ஏக்களில் என்.ஆர்.காங்கிரஸ் 10, பாஜக 6, திமுக 6, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 6 பேர் உள்ளனர். இதுதவிர பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக உள்ளனர்.

நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் உண்டு என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே நேரத்தில் மக்களால் தேர்வான எம்எல்ஏக்கள் மட்டுமே மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க இயலும் என்று அரசுத் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

இதனால் மாநிலங்களவைத் தேர்தலில் நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை உண்டா, இல்லையா என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம், சட்டத்துறையிடம் கருத்து கேட்டு தெரிவித்துள்ளது.

இதுபற்றி அரசு உயர் அதிகாரிகள் கூறுகையில், "இந்திய தேர்தல் ஆணையம் சட்டத்துறையிடம் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து கேட்டு தெரிவித்துள்ளது. அதன்படி அரசியலமைப்புப் பிரிவு 80(4)(5)இன் கீழ் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, ஷரத்து 27(4)இன் கீழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சட்டப்பேரவை வளாகத்துக்கு மட்டுமே பொருந்தும். அதன்படி புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள் மூவரும் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க உரிமையில்லை" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x