Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

நீட் தேர்வுக்கு எதிரான செயல்பாடுகளில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெறுவார்: தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நம்பிக்கை

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், அகரமேல் மற்றும் மேல்மணம்பேடு ஆகிய ஊராட்சிகளில், 2017-18-ம் ஆண்டுக்கான, மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் செலவில் 5 உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விளக்குகளை நேற்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இந்நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது:

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுகளை நனவாக்குகிற, மக்களுக்கு அளித்த வாக்குறுதியைநிறைவேற்றக் கூடிய, தொலைநோக்கு பார்வை கொண்ட ஆட்சியாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவையில் நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாம் எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறோம். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பதிவு செய்துள்ளோம். நீட் தேர்வுக்கு எதிரான செயல்பாடுகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெறுவார். நீட் தேர்வால் பல மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு போய் விடுகிறார்கள். மாணவர்களின் மரணம் வருத்தம் அளிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வதில் வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x