Published : 14 Sep 2021 10:54 PM
Last Updated : 14 Sep 2021 10:54 PM

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி; நாளை விருப்ப மனு: பாமக அறிவிப்பு

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என பாமக முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று மாலை நடைபெற்றது.

அக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை ராமதாஸ், அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து நாளையும், நாளை மறுநாளும் ( செப்டம்பர் 15 மற்றும் 16-ஆம் நாட்கள்) விருப்ப மனுக்கள் பெறப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், கட்சியின் வளர்ச்சிக்காக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என பாமக முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x