Published : 14 Sep 2021 04:18 PM
Last Updated : 14 Sep 2021 04:18 PM

ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள்: அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாகக் கட்டப்படும் காவல் நிலையம், தாமரைக்கேணி என்ற நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருப்பதாகவும், இந்தக் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், நீர்நிலையைப் பழைய நிலைக்குக் கொண்டுவரக் கோரியும் 'அறப்போர் இயக்கம்' சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர்கள் இரண்டு பேர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஐஐடி பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன், சவுமேந்திரர் ஆகியோர் ஆய்வு செய்து, நீதிமன்றத்துக்கு அளித்த அறிக்கையில் இடம் நீர்நிலையை ஆக்கிரமித்துக் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப். 14) மீண்டும் விசாரணைக்கு வந்ததுபோது, ஐஐடி பேராசிரியர் அறிக்கையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருப்பதாகவும், இதேபோன்று தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களின் அடிப்படையில், செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்நிலை எனவும், 1987ஆம் ஆண்டு வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடம் மேய்க்கால் புறம்போக்கு என இருப்பதாகவும் தெரிவித்த நீதிபதிகள், கால்வாய்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நீர் தேங்கும் பகுதிகளைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும், அதனைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x