Published : 14 Sep 2021 03:41 PM
Last Updated : 14 Sep 2021 03:41 PM

காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 134 பேருக்கு அண்ணா பதக்கம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, 134 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் / பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 14) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் நிலை வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக் காவலர் முதல் சிறை கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் உதவி படை தளபதி முதல் வட்டாரத் தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இளநிலை அறிவியல் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் 'தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்' வழங்கிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

மேலும், தமிழக முதல்வரின் வீரதீரச் செயலுக்கான தீயணைப்புத் துறை பதக்கம் மற்றும் தலா ரூ.5 லட்சம் பண வெகுமதி, 14.11.2020 அன்று மதுரையில் உள்ள சஞ்சய் டெக்ஸ்டைல் என்ற நிறுவனத்தில், நிகழ்ந்த தீ விபத்தில் இருந்து பல மனித உயிர்களையும், சொத்துகளையும் காப்பாற்றிய நிலையில் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கி, பலத்த காயங்களுடன் தங்கள் உயிரைத் தியாகம் செய்த தீயணைப்பு வீரர்கள் கு.சிவராஜன் மற்றும் பெ.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் உட்பட 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்களுக்கு அவர்கள் ஆற்றிய வீர தீரச் செயல்களுக்காக வழங்கப்படுகிறது.

மேற்கண்ட பதக்கங்கள் முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x