Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM

தமிழகம் முழுவதும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்

சென்னை

தமிழகம் முழுவதும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, சென்னை சாந்தோம் பள்ளி வளாகத்தில் சிறப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஆண்டுதோறும் பிப்ரவரி 10, ஆகஸ்ட் 10 ஆகிய 2 நாட்களும் குடற்புழு நீக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேசிய குடற்புழு நீக்க வாரம் செப்டம்பர் 13-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 2 சுற்றுகளாக தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13 முதல் 18 வரை முதல் சுற்றும், செப்டம்பர் 20 முதல் 25 வரை 2-ம் சுற்றும் நடைபெறுகிறது. 1-19 வயதினர், 20-30 வயது பெண்கள் (கருவுறாத மற்றும் பாலூட்டாதவர்கள்) ஆகியோருக்கு 2 சுற்றுகளாக (திங்கள், வியாழன், வெள்ளி, சனி) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மாத்திரைகள் வழங்கப்படும். இதில் விடுபட்டவர்களுக்கு செப்டம்பர் 27-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாம்களில் அங்கன்வாடி, சுகாதாரத் துறை பணியாளர்கள், சுகாதாரப் பயிற்சி மேற்கொள்ளும் துணை செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் என மொத்தம் 54,439 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.மனிஷ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மயிலாப்பூர் எம்எல்ஏ வேலு ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x