Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சிலர் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதாகவும், இதனால் விபத்துகள் நேரிடுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து துறை வடக்கு சரக இணை ஆணையர் உத்தரவின்பேரில், தாம்பரம்-அம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 9-ம் தேதி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக போக்குவரத்து இணை ஆணையர் அ.ரவிச்சந்திரன் கூறும்போது, "சாலை விதிகளை மீறுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கெனவே நடத்திய சிறப்பு ஆய்வில், 112 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கடந்த 9-ம் தேதி தாம்பரம்-அம்பத்தூர் நெடுஞ்சாலையில் மேற்கொண்ட ஆய்வில், அதிவேகத்தில் சென்ற 71 கார்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு மொத்தம் ரூ.2.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT