Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM

அத்திவரதர் படம் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான பாஜக, இந்து முன்னணியினர் 7 பேருக்கு ஜாமீன்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் படம் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக கைது செய்யப்பட்ட பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த 7 பேருக்கும் நேற்று ஜாமீன் கிடைத்தது.

காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோயில் முன்பு, கடந்த 2-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கடை அருகே தேங்காய் கடை வைத்திருக்கும் பூபதி என்பவர் அத்திவரதர் படத்தின் அருகேசெருப்பை மாட்டி வைத்திருந்ததாகத் தெரிகிறது. பாஜக மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடையில் இருந்த தேங்காயை சிலர் எடுத்து கீழே வீசினர்.

பின்னர், அத்திவரதர் படம் அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாஜகவினரும், தங்கள் கடை சூறையாடப்பட்டதாக கடை தரப்பிலும் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இரு தரப்பு புகார்கள் மீதும்வழக்குப் பதிவு செய்த போலீஸார் அத்திவரதர் படத்தை அவமதித்த பூபதியை அன்றைய தினம்கைது செய்தனர். கடையை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகார்தொடர்பாக காஞ்சிபுரம் பாஜக மாவட்ட பொதுச் செயலர் கூரம்விஸ்வநாதன், காஞ்சிபுரம் மேற்குநகரத் தலைவர் அதிசயம் குமார்,காஞ்சிபுரம் மேற்கு நகர பொதுச்செயலர் ஜீவா, இந்து முன்னணியைச் சேர்ந்த சந்தோஷ் உள்ளிட்ட 7 பேரை கடந்த 5-ம் தேதி கைது செய்தனர். இந்தச் சூழ்நிலையில் கடந்த 8-ம் தேதி பூபதி ஜாமீனில் வெளியே வந்தார்.

அத்திவரதர் படத்தை அவமதித்தவர் மீது எளிய பிரிவுகளிலும், அதனை தட்டிக் கேட்ட பாஜகவினர் மீது கடுமையான பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் மீதும், தமிழக அரசு மீதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் செய்திகள் வைரலாகின. இந்தச் சூழ்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பாஜகவினருக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பாபு கூறும்போது, “அத்திவரதர் படத்தை அவமதித்தவர் மீது சாதாரண பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அதனை தட்டிக்கேட்ட பாஜக மற்றும் இந்து முன்னணியினர் மீது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேங்காய் கடையில் பொதுச் சொத்துகள் எங்கிருந்து வந்தது. காவல் துறையினர் ஏன் இப்படி செயல்படுகின்றனர்? என்பது கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x