Published : 13 Sep 2021 05:52 PM
Last Updated : 13 Sep 2021 05:52 PM

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் படுகொலை; குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: அதிமுக அறிவிப்பு

ஈபிஎஸ் - ஓபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் படுகொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.13) வெளியிட்ட அறிக்கை:

"நபிகள் நாயகத்தின் கொள்கையை மனதிலே ஏந்தி, சமூக அக்கறையோடு எதிர்கால சமுதாயம் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், மன வலிமையோடும் இந்த சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு வாழ்ந்து வந்த திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தைச் சேர்ந்த வசீம் அக்ரம் முஸ்லிம்களின் கடமையான ஐந்து வேளை தொழுகையின் ஒரு பகுதியாக, 10.9.2021 அன்று பள்ளிவாசலில் தொழுகை முடித்து தன்னுடைய மகனோடு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், நட்ட நடுரோட்டில் தன்னுடைய மகன் பிஞ்சுக் குழந்தையின் கண் எதிரே, சமூக விரோதிகளால் கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்டுள்ளார். அன்னாரின் மரணச் செய்தி அறிந்ததும் தாங்கொணா துயரமும், தாள முடியா வேதனையும் அடைந்தோம்.

இந்த நாட்டில் சமூக சிந்தனையோடு நல்லதொரு சமுதாயம் வரவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒருவர் வாழவே முடியாதா? என்ற எண்ணத்தை அவரின் மரணம் எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. வசீம் அக்ரமை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எந்த வார்த்தைகளைச் சொன்னாலும் இட்டு நிரப்ப முடியாத, ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகவே நாங்கள் கருதுகிறோம்.

இந்தக் கொடூரக் கொலையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் அனைவரையும் இனம்கண்டு, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இருந்தாலும், ஒரு நல்ல மனம், சட்டம் - ஒழுங்கைப் பேண முடியாத அரசால் நம்மைவிட்டுச் சென்றிருக்கிறது. அவரின் இழப்பை ஈடுசெய்கின்ற விதமாக தமிழக அரசு அவர்தம் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாகவும், எதிர்காலத்தை நல்ல முறையிலே வழிநடத்திச் செல்ல அவர்தம் குடும்பத்தில் தகுதி வாய்ந்த நபருக்கு அரசு வேலையும் வழங்கி, உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதே வேளையில், அதிமுகவின் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி, அதிமுகவும் அவர்தம் குடும்ப இழப்பிலே தோளோடு தோள் நின்று பங்கெடுத்துக் கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்".

இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x