Published : 13 Sep 2021 04:08 PM
Last Updated : 13 Sep 2021 04:08 PM

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா; தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும்: கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுகிற தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (செப். 13) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்கள் நிறைவேறுகிற வகையில், அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இன்றைக்கு சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறுகிற வகையில், மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறார். இதற்காகத் தமிழக முதல்வரை மனதாரப் பாராட்டுகிறேன்.

கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு, மத்திய பாஜக அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக, அன்றைக்கு மக்களவையில் 38 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும் பெற்றிருந்த அதிமுக அதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற பாஜகவின் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தபோது, நீட் தேர்வுக்கு விலக்கு பெறுகிற வகையில் முன்நிபந்தனைகளை விதித்திருக்கலாம்.

ஆனால், மடியில் கனம் இருக்கிற காரணத்தினாலே முதுகெலும்பில்லாத அதிமுக அரசு, பாஜக அரசிடம் நிபந்தனை விதிக்க முடியவில்லை. அதற்காக, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களை வஞ்சிக்கிற வகையில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது.

நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் அனிதா உள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது கூட, சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. இந்தத் தற்கொலைகளுக்கு அதிமுக ஆட்சிதான் பொறுப்பாகும்.

கடந்த சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு கோரும் தீர்மானங்கள் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டதை தமிழக சட்டப்பேரவைக்குத் தெரிவிக்காமல் இரண்டு ஆண்டுகள் மூடி மறைத்தது மிகப்பெரிய மக்கள் விரோதச் செயலாகும். இதன் மூலம், தமிழக சட்டப்பேரவையின் உரிமைகளை அவமதித்த குற்றத்தை அதிமுக அரசு செய்தது. இதற்காக ஜனநாயகத்தில் எவ்வளவு பெரிய தண்டனையை வேண்டுமானாலும் வழங்கலாம்.

அத்தகைய படுபாதகச் செயலைச் செய்தவர்கள் இன்றைக்கு தற்கொலை செய்து கொண்ட மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று கோருகிறார்கள். கடந்த கால அதிமுக ஆட்சியின்போது அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டபோது, குறைந்தபட்சம் இரங்கல் செய்தி கூட வெளியிடாதவர்கள் இப்போது இழப்பீட்டுத் தொகை கேட்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத செயலாகும்.

அதேபோல, நீட் தேர்வு காரணமாக கிராமப்புறத்திலே படிக்கிற ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான கனவுகளைச் சிதைத்துச் சீரழித்த அதிமுகவினருக்கு உரிய தண்டனையைக் கடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது. இதுகுறித்து, சட்டம் இயற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை இருக்கிறது. இந்நிலையில், நீட் தேர்வு குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்கு முன்பாக மாநில அரசுகளைக் கலந்தாலோசனை செய்து ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.

அதற்கு மாறாக, தன்னிச்சையாக மாநில உரிமைகளைப் பறிக்கிற வகையில், பொதுப் பட்டியலில் உள்ள கல்வி சம்பந்தமான நீட் தேர்வு குறித்து மத்திய பாஜக அரசு சட்டம் இயற்றுவது கூட்டாட்சி தத்துவத்துக்குக் கேடு விளைவிப்பதாகும்.

எனவே, நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு பெறுகிற வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிற மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு உரிய அழுத்தம் தருகிற அனைத்து முயற்சிகளையும் முதல்வர் மேற்கொள்வார் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மத்திய பாஜக அரசுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி உரிய அழுத்தத்தைக் கொடுப்பார்கள்.

இதன் மூலம், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுகிற தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிற வகையில் தமிழக முதல்வர் எடுத்திருக்கிற நடவடிக்கை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெறும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x