Published : 13 Sep 2021 01:17 PM
Last Updated : 13 Sep 2021 01:17 PM

நீட் தேர்வு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்பது தவறான தகவல்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

நீட் தேர்வானது மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்பது தவறான தகவல் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சியாக இருந்தபோதே, திமுக வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், நீட் தேர்வு தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யக் குழு அமைத்தது. அக்குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக.13-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செப். 13) நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

"நீட் என்னும் தேர்வைக் கொண்டுவந்து மருத்துவக் கல்விக் கனவைச் சிதைத்து வரும் மத்திய அரசுக்கு எதிராக கடந்த நான்காண்டு காலமாகத் தமிழகத்தில் மிகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விலைமதிக்க முடியாத மாணவ, மாணவிகள் தங்களது இன்னுயிரை இந்தப் போராட்டத்துக்குத் தாரைவார்த்து மறைந்து போயிருக்கிறார்கள்.

தொடக்கத்தில் இருந்தே இந்த நீட் தேர்வை திமுக எதிர்த்து வருகிறது. ஏனென்றால், மாணவர்களுக்குக் கல்வித் தடையை ஏற்படுத்தக்கூடிய நுழைவுத் தேர்வுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் திமுக அரசு.

இதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வை ரத்து செய்ய, திமுக அரசு அமைந்தவுடன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று திமுகவினுடைய தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறோம். அதை நிறைவேற்றும் வகையில், மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இளநிலை மருத்துவக் கல்விச் சேர்க்கைகளை, இனிமேல் 12ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்துவதற்கு ஏதுவாக, வலிமையான சட்டமுன்வடிவினை இப்பேரவையில் நான் முன்மொழிகிறேன்.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம்.

அரசாணை எண்: 283, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, நாள் 10-6-2021 அன்று இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிலே பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடம்பெற்று இருந்தார்கள். இந்த உயர்மட்டக் குழுவின் ஆய்வு வரம்புகளும் வெளியிடப்பட்டன.

பொதுமக்கள் அனைவரிடம் இருந்தும் கருத்துகளை இக்குழு கேட்டுப் பெற்றது. மின்னஞ்சல், கடிதங்கள் மற்றும் ஆணையத்தில் வைக்கப்பட்டிருந்த கருத்துக் கேட்புப் பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் என ஆணையத்துக்கு பல்லாயிரக் கணக்கானவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள்.

இந்த வழிமுறைகளின் வாயிலாக 86 ஆயிரத்து 342 பேரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து, தனது விரிவான பரிந்துரைகளை நீதிபதி ஏ.கே.ராஜன் குழு 14-7-2021 அன்று அரசுக்கு அளித்தது. அந்தப் பரிந்துரைகளில், சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெறும் கனவுக்கு இடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில் வளம் மிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து, எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அரசுப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்துக்கும் குறைவாகக் கொண்டுள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், எம்பிபிஎஸ் மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை நீட் தேர்வு உறுதிசெய்வதாகத் தெரியவில்லை எனவும், ஒப்பிடுகையில், குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு மட்டுமே தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு புகுத்தியுள்ளது எனவும் அறிக்கை முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆகவே, 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைச் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 3/2007) போன்றதொரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெறலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த உயர்மட்டக் குழு அளித்த விரிவான பரிந்துரைகளைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள, தலைமைச் செயலாளர் தலைமையில் அரசு செயலாளர்களைக் கொண்ட குழு ஒன்று 15-7-2021 அன்று அமைக்கப்பட்டது. செயலாளர்கள் குழு, 2007-ல் தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டத்தைப் போன்று மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கு நீட் தேர்வினை விலக்குவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு சட்டம் இயற்றி, சட்டப்பேரவையின் ஒப்புதல் பெற்று, அதற்கு குடியரசுத் தலைவருடைய ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

நீட் தேர்வானது மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்பதும் தவறானதே. 2017ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே அதிக மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள மாநிலங்களுள் தமிழகம் ஒன்றாக இருந்தது.

இந்த நிறுவனங்களிடமிருந்து பட்டம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவராக விளங்கினர். எனவே, மேல்நிலைப் பள்ளிப் பாடத் திட்டம் போதுமான தரத்தில் இருக்கும் சூழலில், தகுதித் தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேர்க்கையானது எந்த வகையிலும் கல்வியின் தரத்தைக் குறைத்துவிடாது.

மேலும், பள்ளித் தேர்வு மதிப்பெண்கள் நெறிப்படுத்துதல் முறைமூலமாக சரிசெய்யப்பட்டால், அது முறையான, நியாயமான மற்றும் நடுநிலையான சேர்க்கை முறையை வழங்கும். மருத்துவக் கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையினை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் மூன்றாவது பட்டியலில் 25-வது உள்ளீட்டில் காணலாம். எனவே, மாநில அரசானது அதை முறைப்படுத்தத் தகுதியுடையது. ஆகவே, இன்று என்னால் இந்த சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்தப் புதிய சட்டமுன்வடிவில், மருத்துவ இளநிலைப் படிப்பில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் ஆகியவற்றுக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த முன்மொழியப்படுகிறது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது.

உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை கவனமாகப் பரிசீலித்த பின்பு, சமூக நீதியை உறுதி செய்யவும், சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகளை நிலைநிறுத்தவும், பாதிப்புக்குள்ளாகக்கூடிய மாணவர்களைப் பாதுகாக்கவும், மாநிலத்தில், முக்கியமாக கிராமப் பகுதிகளில், வலுவான சுகாதாரக் கட்டமைப்பை உறுதி செய்யவும், பிளஸ் 2 வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை மேற்கொள்ள இச்சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் இந்தச் சட்ட முன்வடிவினை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நீட் தேர்வால் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த அனிதா தொடங்கி, ஏராளமான மாணவர்கள் தங்களுடைய உயிரை இழக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நேற்றைக்குக்கூட சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தனுஷ் என்ற மாணவர் இந்த நீட் தேர்வினால் உயிரிழந்திருக்கிறார். உயிர்க்கொல்லியாக மாறி வரும் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுவதற்கான இந்த மசோதாவை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இன்றைக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பெற்று வரலாற்றுச் சாதனையை நாம் புரிந்திருக்கிறோம். இந்த நீட் தேர்வு விவகாரத்திலும் அனைத்துக் கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பினை நல்கி, சமூக நீதியில் வரலாறு படைத்திட துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x