Published : 13 Sep 2021 12:18 PM
Last Updated : 13 Sep 2021 12:18 PM

நீட் தேர்வால் மாணவர்கள் மடிந்தபோது மரண அமைதி காத்தது அதிமுக: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

நீட் தேர்வால் மாணவர்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சி நடத்தியது அதிமுக என, முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக.13-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செப்.13) நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார்.

முன்னதாக, நீட் தேர்வு பயத்தால் மாணவர் தனுஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

"நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தி, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்த்தவர் கருணாநிதி. ஏன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூட நீட் தேர்வை நடத்த அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர், முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழகத்தில் முதன்முதலில் நடத்தப்பட்டது.

'நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்று இதே சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவரான இவர் முதல்வராக இருந்தபோதுதான்.

நீட் தேர்வு அச்சத்தில், அனிதா உள்பட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது உங்கள் ஆட்சியில்தான். குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்ததும் அதிமுக ஆட்சிதான்.

அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராக இருந்தபோதுதான். இப்போது உயிரிழந்த மாணவர் தனுஷ் இருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் நீங்கள், அதாவது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான்.

மத்திய அரசுடன் கூட்டணியாக இருந்தீர்கள். இப்போதும் இருக்கிறீர்கள். சிஏஏ மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை வந்தபோது, பாஜக கூறியபோது, நீட் தேர்வுக்கு விலக்கு தர வேண்டுமென்று அதிமுக நிபந்தனை விதித்து இருக்கலாம். அந்தத் தெம்பு, திராணி அதிமுகவுக்கு இல்லை.

அதைச் செய்திருந்தால், நீட் தேர்வுக்கு ஓரளவுக்கு விலக்கு கிடைத்திருக்கும். ஆனால், நீட் தேர்வால் மாணவர்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சி நடத்தியதுதான் அதிமுக.

ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சட்ட மசோதாவை இன்று நான் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்து, 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவக் கல்வியில் மாணவர்களைச் சேர்க்க இந்த அரசு அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x