

தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை ஆனிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாவுநிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுபெற்று இருப்பதால் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற இருப்பதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோவை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடு. வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும்.
மேலும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரும். இதனால், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசகூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.