Published : 12 Sep 2021 02:36 PM
Last Updated : 12 Sep 2021 02:36 PM

மாணவர் தனுஷ் மரணத்துக்குத் திமுக அரசே முழுப்பொறுப்பு: அண்ணாமலை கருத்து

அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரைப் பலி வாங்கும் திமுக அரசே மாணவர் தனுஷ் மரணத்துக்கு முழுப்பொறுப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் கூழையூரைச் சேர்ந்த மெஷின் ஆப்பரேட்டர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் (19). ஏற்கெனவே 2019-ல் இருந்து நீட் தேர்வை எழுதி வருகிறார். இதில் பல் மருத்துவத்துக்கு இடம் கிடைத்தபோதும் எம்பிபிஎஸ்தான் படிக்கவேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார். இதனால் மீண்டும் தேர்வை எழுத முடிவெடுத்துப் படித்து வந்துள்ளார்.

2 முறை நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தனுஷ் இருந்துள்ளார். இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் நிலையில் மாணவர் தனுஷ், தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும், உச்ச நீதிமன்றம் பாராட்டும் நீட் தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளைத் திமுக அரசு நிறுத்தட்டும்.

அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரைப் பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு.'' என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x