Published : 12 Sep 2021 03:19 AM
Last Updated : 12 Sep 2021 03:19 AM

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 30 கிலோ பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்

விநாயகர் சதுர்த்தி விழாவைஒட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் ஆகியோருக்கு தலா 30 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டை நேற்று முன்தினம் படையல் செய்யப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டையில் மட்டுவார் குழலம்மை உடனாய தாயுமானசுவாமி கோயில் உள்ளது. இங்கு விநாயகர் மலையின் மேல்உச்சிப்பிள்ளையாராகவும், மலையின்கீழ் மாணிக்க விநாயகராகவும் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கோயில் மடப்பள்ளியில் தலா 30 கிலோ எடை கொண்ட இரு கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட்டன. இதில் ஒரு கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கு படையல் செய்யப்பட்டது. 30 கிலோ எடை கொண்ட மற்றொரு கொழுக்கட்டையை வெள்ளைத் துணியில் வைத்து மூங்கில் கம்பில் கட்டி படிகள் வழியாக சுமந்து சென்று மலைமேல் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு படையல் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தலா 75 கிலோ எடையிலான இரு பிரம்மாண்ட கொழுக்கட்டைகள் செய்யப்பட்டு, இரு விநாயகர்களுக்கும் படையல் செய்யப்படும். இந்த விழாவில் கோயில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x