Published : 11 Sep 2021 07:23 PM
Last Updated : 11 Sep 2021 07:23 PM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முழு விசாரணை: காவல்துறை அதிகாரிகள் தகவல்

உதகை பழைய எஸ்.பி. அலுவலகத்துக்கு விசாரணை நடத்தவந்த ஆய்வாளர் வேல்முருகன்.

உதகை

கோடநாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகளானதால் முழுமையான விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு கொள்ளை வழக்கு விசாரணையை போலீஸார் விரிவுபடுத்தி வருகின்றனர். இந்த வழக்கின் 103 சாட்சிகளில் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது பல சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணை உதகையில் உள்ள பழைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரிடம் மறு விசாரணை நடந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 10-வது நபரான ஜித்தின் ஜாயின் உறவினர் ஷாஜியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், வழக்கின் 40-வது சாட்சியான உயிரிழந்த கனகராஜின் நண்பர் குழந்தைவேலு மற்றும் சிவனிடம் இன்று 5 மணி நேரம் விசாரணை நடந்தது.

இந்நிலையில், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் மற்றும் தனிப்படை போலீஸார் காலை முதல் மாலை வரை தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

உயிரிழந்த கனகராஜின் நண்பர்களான குழந்தைவேலு மற்றும் சிவன் ஆகியோரை சென்னையிலிருந்து அழைத்து வந்து விசாரித்தனர். கனகராஜின் நெருங்கிய நண்பரான குழந்தைவேலு ஏற்கெனவே கோடநாடு வழக்கில் 40-வது சாட்சியாக உள்ளார். கனகராஜுடன் எங்கு சென்றாலும் ஒன்றாக இவர்கள் தங்குவார்களாம். ஆனால், அதிமுக ஆட்சியின்போது அவர் விசாரிக்கப்படவில்லை. இதனால் போலீஸார் இன்று விசாரித்துள்ளனர்.

கனகராஜ் எப்படி இறந்தார்? அவர் இறக்கும்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்? கோடநாடு கொள்ளை குறித்து ஏதாவது பேசினாரா? இந்தக் கொள்ளைக்கும் முக்கிய அரசியல்வாதி யாருக்காவது தொடர்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறாரா? கனகராஜ் கோடநாடு எஸ்டேட்டிலிருந்து ஆவணங்கள் கொண்டுவந்தது குறித்து எப்போதாவது பேசியிருக்கிறாரா? என்று பல கேள்விகள் கேட்டு பதிலைப் பதிவு செய்துகொண்டனர்.

சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகளாகி விட்டதால், தற்போது முழுமையான விசாரணை நடந்து வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ''கோடநாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகளாகி விட்டன. ஆதாரங்கள் பழையதாகி விட்டன. இதனால், மீண்டும் முழு விசாரணை நடத்தப்படுகிறது. குற்றவாளிகள் மற்றும் சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இன்று கனகராஜ் உடன் தங்கியிருந்த சிவன் மற்றும் குழந்தைவேலுவிடம் விசாரணை நடத்தப்பட்டது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x