Published : 11 Sep 2021 02:29 PM
Last Updated : 11 Sep 2021 02:29 PM

சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயம்: அறுவை சிகிச்சையின்றி அகற்றிய அரசு மருத்துவர்கள்

சிறுவனின் தொண்டை குழியில் இருந்து அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்ட ஒரு ரூபாய் நாணயம்.

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயத்தை அறுவை சிகிச்சையின்றி மருத்துவர்கள் அகற்றினர்.

திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் லோகநாதன் மகன் மிதுன் (2). இந்தச் சிறுவன் நேற்று (செப். 10) விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி உள்ளான். இதனால், உணவு உட்கொள்ள முடியாமலும், தண்ணீர் குடிக்க முடியாமலும் தவித்துள்ளான்.

இதையடுத்து, திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர் குழு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தது. அதன்படி, அங்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில், தொண்டை பகுதியில் (உணவு குழாய் தொடங்கும் இடத்தில்) ஒரு ரூபாய் நாணயம் சிக்கிக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொர்ந்து, காது மூக்கு தொண்டை துறையின் தலைவர் மருத்துவர் இளஞ்செழியன் மேற்பார்வையில் சிறப்பு மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். பின்னர், அறுவை சிகச்சை பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு மயக்கவியல் மருத்துவர்கள் ஆனந்தராஜ், யுவராஜ் ஆகியோர் மயக்க மருந்து செலுத்தினர். அதன்பிறகு, 'LARYNGOSCOPY' முறையில் அறுவை சிகிச்சையின்றி, சிறுவனின் தொண்டை குழியில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயத்தை வெற்றிகரமாக சிறப்பு மருத்துவக் குழுவினர் அகற்றினர்.

பின்னர், மருத்துவர்களின் கண்காணிப்பில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு, நேற்று இரவு முதல் வழக்கமான உணவு வழங்கப்பட்டது. சிறுவனின் உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியதும், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு, பெற்றோர் இன்று (செப். 11) அழைத்துச் சென்றனர்.

மீண்டும் எச்சரிக்கை

குழந்தைகளை வளர்த்து வரும் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், பெற்றோரின் கவனக் குறைவு மற்றும் அலட்சியம் காரணமாக, குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆபத்தான நிலைக்குச் சென்று வருகின்றனர். விளையாடும் குழந்தைகள் பார்வையில் தெரியும் வகையில் நாணயம் உள்ளிட்ட சிறிய பொருட்களை வைக்க வேண்டாம் என்றும், அதுபோன்ற பொருட்களை விளையாட கொடுத்து ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என, மருத்துவர்கள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x