Last Updated : 11 Sep, 2021 02:16 PM

 

Published : 11 Sep 2021 02:16 PM
Last Updated : 11 Sep 2021 02:16 PM

கண்முன்னாலேயே குளத்தில் தவறிவிழுந்து 2 குழந்தைகள் பலி; துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை

குழந்தைகளின் உடல்களைப் பார்த்துக் கதறி அழுத லோகேஸ்வரன், மீனாட்சி.

ஆம்பூர்

ஆம்பூர் கைலாசகிரி மலை குளத்தில் குளிக்கச்சென்ற மகன், மகள் இருவரும் கண்முன்னாலேயே தவறிவிழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த துக்கம் தாங்காமல் குழந்தைகளின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓட்டுநர் லோகேஸ்வரன் (44). இவருடைய மனைவி மீனாட்சி(37). இவர்களுக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களது மகன் ஜஸ்வந்த் (8), மகள் ஹரிபிரீத்தா (6).

ஊத்தங்கரை கள்ளூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஜஸ்வந்த் 4-ம் வகுப்பும், ஹரிபிரீத்தா 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், மீனாட்சியின் தாய் வீடான ஆம்பூர் அடுத்த கடாம்பூர் கிராமத்துக்கு லோகேஸ்வரன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து தங்கியிருந்தார்.

மாமியார் வீட்டில் இருந்தபடியே லோகேஸ்வரன் வேலைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் ஆம்பூர் வருவது வழக்கம். இதற்கிடையே நேற்று (செப்.10) விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, லோகேஸ்வரன், தன் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்கு குளத்தில் மீன் பிடிக்கச் செல்லும்பொழுது குழந்தைகள் இருவரும் கால் தவறி குளத்தில் விழுந்தனர்.

லோகேஸ்வரனுக்கு நீச்சல் தெரியாது. இருந்தாலும், குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி மூச்சுத் திணறிய குழந்தைகளை அவர் காப்பாற்ற முயன்றார். ஆனால் குழந்தைகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி, பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்துத் தகவலறிந்ததும், உமராபாத் காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, நீரில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் சடலங்களை மீட்டனர். கரைக்குக் கொண்டு வரப்பட்ட குழந்தைகளின் உடல்களைப் பார்த்தும் லோகேஸ்வரன் மற்றும் மீனாட்சி ஆகியோர் கதறி அழுது துடித்த சம்பவம், அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது.

இதையடுத்து, குழந்தைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், குழந்தைகளின் உடல்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டன. வெளியே லோகேஸ்வரனும், மீனாட்சியும் இரவு முழுவதும் அழுதபடியே குழந்தைகளின் உடல்களை வாங்கக் காத்திருந்தனர்.

இதற்கிடையே, இன்று (செப்.11) காலை தம்பதி இருவரும் ஆம்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அங்குள்ள ஒரு கடையில் குளிர்பானம் ஒன்றை வாங்கி அதில் பூச்சி மருந்தைக் கலக்கிய லோகேஸ்வரன், முதலில் குடித்தார். அதன்பிறகு மீனாட்சி குடிக்க முயன்றபோது அதை லோகேஸ்வரனே தட்டிவிட்டார்.

இதைக் கண்ட மீனாட்சி அலறித் துடித்தார். அருகில் ரயிலுக்காகக் காத்திருந்த பயணிகள் அங்கு ஓடி வந்து லோகேஸ்வரனை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதைக்கண்ட மீனாட்சி, குழந்தைகள் சென்ற இடத்துக்கே நீங்களும் சென்றுவீட்டார்களா ? எனக்கூறி கதறி அழுதார்.

இது குறித்து ஆம்பூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் மற்றும் 2 குழந்தைகளைப் பறிகொடுத்த மீனாட்சியை அவரது உறவினர்கள் மீட்டு, வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x