Published : 11 Sep 2021 10:42 AM
Last Updated : 11 Sep 2021 10:42 AM

அவர் சேகர்பாபு அல்ல, 'செயல்பாபு'; அறநிலையத்துறையின் பொற்காலம் வரவிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் சேகர்பாபு: கோப்புப்படம்

சென்னை

அமைச்சர் சேகர்பாபு, 'செயல்பாபு' என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒருகால பூஜை திட்டத்தில் இருக்கக்கூடிய கோயில்களைச் சார்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும், ரூ.1,000 வழங்கும் திட்டத்தை இன்று (செப். 11) முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை, திருவான்மியூரில் தொடங்கி வைத்தார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

"அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எப்படி பணியாற்றுகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரை சேகர்பாபு என்று அழைப்பதை விட 'செயல்பாபு' என்றுதான் அழைக்க வேண்டும். அந்த பெயருக்கு முழு தகுதிப் படைத்தவராக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

சட்டப்பேரவையில் ஒரு திட்டத்தை அறிவித்து ஒரு வார காலம்தான் ஆகிறது. இன்னும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடியவும் இல்லை, 13-ம் தேதிதான் முடிகிறது. சட்டப்பேரவை முடிவதற்குள் ஒரு திட்டம் செயல்படுகிறது என்றால் அது இந்த திட்டம்தான்.

'எள் என்றால் எண்ணெய்யாக வந்து நிற்பார்கள்' என்போம். ஆனால், சேகர்பாபுவை பொறுத்தவரையில் எள் என்று சொல்லக்கூடத் தேவையில்லை. அதற்குள் எண்ணெய்யாக வந்து நிற்பார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் இருக்கின்றனர். அவர்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை கொடுத்துவைத்த துறையாக அமைச்சர் சேகர்பாபுவால் மாறிவிட்டது. 24 மணிநேரமும் செயல்படக்கூடிய அமைச்சராக அவர் இருக்கிறார். கோயில் நிலங்கள், சொத்துக்கள் மீட்கப்படுகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இறைவனை போற்றக்கூடிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 15 வகையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பின் அவர் யாரும் செய்யாத வகையில், 120 அறிவிப்புகளை வெளியிட்டார். அது ஒரு பெரிய சாதனை. ஏராளமான கோயில் திருப்பணிகள் நடைபெற உள்ளன. புதிய தேர்கள் வலம் வரவுள்ளன.

அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்படவுள்ளன. இவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டவுடன், அறநிலையத்துறையின் பொற்காலம், இன்னும் சில மாதங்களில் உருவாகும். அந்தவரிசையில் இன்று ஒருகால பூஜை திட்டத்தில் இருக்கக்கூடிய 12,959 கோயில்களைச் சார்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும், ரூ.1,000 வழங்கும் திட்டத்தை இன்று நான் தொடங்கி வைக்கிறேன்.

இதனால், ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதலாக செலவாகும். மன்னிக்க வேண்டும். இதை நான் செலவு என்று சொல்லவில்லை. இதன்மூலம், 13,000 குடும்பங்கள் வாழ்வு பெறுகிறார்கள். ஒருகால பூஜை நடைபெறும் கோயில்களில் வைப்பு நிதி 2 லட்ச ரூபாயாக அதிகரித்துத் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்கோயில்களில் வழிபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் பூசாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 13-ம் தேதிக்குப் பிறகு படிப்படியாக நிறைவேற்ற திட்டம் வகுத்துள்ளோம். வெறும் அறிவிப்புடன் எந்த திட்டமும் நின்றுவிடாது. அதனை நானே மாதம்தோறும் கண்காணிக்கவிருக்கிறேன். ஒவ்வொரு திட்டத்துக்கும் முன்னுரிமை தந்து அதையெல்லாம் நிறைவேற்றும் முயற்சியில் நிச்சயம் நான் ஈடுபடவுள்ளேன். அனைத்துத் துறைகளையும் முந்திவிட்டு 'செயல்பாபு' தன் துறை திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்".

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x