Last Updated : 10 Sep, 2021 08:45 PM

 

Published : 10 Sep 2021 08:45 PM
Last Updated : 10 Sep 2021 08:45 PM

தமிழக கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த தனிக்குழு அமைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை: கோப்புப்படம்

மதுரை

தமிழக கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த தமிழ் அறிஞர்கள், ஆன்மிக ஆர்வலர்களை கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழ் சைவ ஆகம விதிப்படி நடத்த உத்தரவிடக்கோரி, பொன்னுசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில், நீதிபதிகள் இன்று (செப். 10) அளித்த தீர்ப்பு:

"உலகிலேயே தமிழ் தான் பழமையான மொழி என்பதற்கு ஏராளமான ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன. குறிப்பாக, கொடுமணல், சிவகளை, கீழடி மற்றும் அழகன் குளம் ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் இதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன.

பானைகளில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள் கிறிஸ்து பிறப்புக்கு 450 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் தமிழ் கல்வெட்டுகளே அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை மற்ற மொழிகளை விட பழமையானவை. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் முறையாக பாதுகாக்கப்படாததால் ஏராளமான கல்வெட்டுகள் சேதமடைந்த உள்ளன.

தெய்வங்கள் உள்ளூர் மொழிகளை புரிந்து கொள்ளாது என்று கூறமுடியாது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஏராளமான பக்தி இலக்கியங்களை படைத்துள்ளனர். அப்பர், சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பக்தி இயக்கங்களை தமிழ்நாட்டில் வளர்த்துள்ளனர்.

இவர்கள் தமிழில் ஏராளமான பாடல்களை சிவனைப் போற்றி பாடியுள்ளனர். மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் 12 நாயன்மார்களும் ஏராளமான சிவாலயங்களை கட்டியுள்ளனர். 12 ஆழ்வார்களால் பெருமாளுக்கு 108 திவ்யதேசங்கள் அருளப்பட்டன.

மனுதாரர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என கோரியுள்ளார். இது இந்த கோயிலுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கோயில்களுக்கும் பொருந்தும். எனவே, அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், பட்டினத்தார் மற்றும் சித்தர்கள் பலரால் இயற்றப்பட்ட பழமையான துதிப்பாடல்களை கண்டறிந்து தொழுதிடும் வகையில், தமிழ் அறிஞர்கள், ஆன்மிக ஆர்வலர்களை கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

இக்குழு நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும். கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான முடிவை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கான குழு அவ்வப்போது மாற்றியமைக்கப்பட வேண்டும். பழமையான தமிழ் துதிப்பாடல்கள் எதுவும் கண்டறியப்பட்டால், அவற்றையும் சேர்த்து குடமுழுக்கு விழாவின் போது பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x