Published : 23 Feb 2016 04:28 PM
Last Updated : 23 Feb 2016 04:28 PM

தேர்தல் காலங்களில் நாடகம் நடத்த சிறப்பு அனுமதி: தலைமை தேர்தல் அதிகாரியிடம் நடிகர் சங்கம் மனு

தேர்தல் காலகட்டத்தில் நாடகக் கலைஞர்கள் நாடகம் நடத்த சிறப்பு அனுமதி தர வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத் துணைத்தலைவர் பொன்வண்ணன், நிர்வாகிகள் மனோபாலா, உதயா உள்ளிட்டவர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது :-

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 1000க்கும் மேற்பட்டோர் தமிழகமெங்கும் உள்ளனர். அவர்கள் நாடக துறையை சார்ந்தவர்கள். நாடகம் என்பது திருவிழா காலங்களில் மட்டுமே நடத்தப்படும். அதற்கான சூழல் வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும். அக்காலகட்டத்தில் கிடைக்கும் வருமானத்தில் தான் வருடம் முழுவதும் குடும்பம் நடத்த வேண்டும். நாடகக் கலைஞர்கள் மிகுந்த கஷ்டத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

கடந்த பொது தேர்தலில் இருந்து தேர்தல் காலங்களில் நாடகம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதால் இக்கால கட்டமான மூன்று மாதங்களும் எங்கள் நாடக கலைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடுகிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி தொகை கட்ட கூட முடியாமல் போகிறது. எனவே. இதை பரிசீலித்து இந்த கால கட்டத்தில் நாடகம் நடத்துவதற்கு சிறப்பு அனுமதி வழங்கி உதவிட வேண்டும். தேர்தலுக்காக தாங்கள் விதிக்கும் விதிகளுக்கு கட்டுப்பட்டு நாடக கலைஞர்கள் நடப்பார்கள்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மனுவை கொடுத்த பிறகு தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

"நாங்கள் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்றவுடன், நாடக நடிகர்களின் பிரச்சினையை மிக முக்கியமான பிரச்சினையாக அணுகினோம். முதல்வரை சந்திக்கும் போது கூட இப்பிரச்சினையைப் பற்றி பேசினோம். 'எங்களுடைய அரசாங்கம் நாடக கலைஞர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் உள்ள பிரச்சினை என்பதால் நீங்கள் தேர்தல் அதிகாரியை சந்தித்து ஒரு கோரிக்கை வையுங்கள்' என்று எங்களுக்கு முதல்வர் வழிகாட்டினார்.

கடந்த தேர்தல் போல் அல்லாமல் இந்த தேர்தலில் உள்ளூர் நிர்வாகத்திடம் வலியுறுத்தி நாடக கலைஞர்கள் சுதந்திரமாக செயல்பட உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கட்சி சம்பந்தமாக நாடகங்கள் இல்லாமல் பார்த்து கொள்வது எங்களுடைய கடமையாக நாடக கலைஞர்களிடம் வலியுறுத்துவோம்.

தேர்தல் என்பது மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய விஷயமாக இருக்கிறது. நடிகர்கள் அந்த விஷயத்தை சொன்னால் போய் சேரும் விதம் பெரிதாக இருக்கிறது. எப்படி மக்கள் தேர்தலில் பங்களிக்க வேண்டும், அரசாங்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் போன்ற விஷயங்களில் எங்களோடு நடிகர் சங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்றார்கள்.

நடிப்பதோடு அல்லாமல் மக்களின் பணியில் ஒரு பங்களிப்பாக இருப்பதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம். தேர்தல் சம்பந்தமான செய்திகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறோம்" என்று பொன்வண்ணன் கூறினார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x