Last Updated : 09 Sep, 2021 05:13 PM

 

Published : 09 Sep 2021 05:13 PM
Last Updated : 09 Sep 2021 05:13 PM

கரோனாவால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய விநியோகம்

கரோனாவால் உயிரிழந்த 40 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணத் திட்டத்தின்கீழ் (சிஆர்எஸ்), மாதாந்திர ஓய்வூதியத் தொகை விநியோகிக்கப்பட்டுள்ளதாக கோவை இ.எஸ்.ஐ.சி சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு) கே.ரகுராமன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று தொழிலாளர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கரோனா காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவதற்காகத் தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐசி), கரோனா நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, காப்பீடு செய்யப்பட்ட நபர்கள் கரோனாவால் உயிரிழந்தால் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு 90 சதவீத சராசரி மாத ஊதியம் நிவாரணமாக மாதந்தோறும் அவர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாகச் செலுத்தப்படும்.

இத்திட்டம் 2020 மார்ச் 24-ம் தேதி முதல் 2022 மார்ச் 23-ம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் உயிரிழந்த, காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிவாரணத் தொகை வழங்கப்படும். அதன்படி, கோவை மண்டலத்தில் கரோனாவால் உயிரிழந்த 40 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக இதுவரை ரூ.5.51 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகக் கோவை இ.எஸ்.ஐ.சி சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு) கே.ரகுராமன் கூறியதாவது:

’’சிஆர்எஸ் திட்டத்தின்கீழ் நிவாரணம் பெற,க ரோனாவால் உயிரிழந்த தொழிலாளி தொற்று கண்டறியப்பட்ட தேதிக்குக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னதாக இஎஸ்ஐசி ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்திருக்க வேண்டும். இறந்த தொழிலாளி, தொற்று கண்டறியப்பட்ட தேதி அன்று வேலையில் இருந்திருக்க வேண்டும். தொற்று கண்டறியப்பட்ட தேதிக்கு ஓராண்டுக்குள் அவரது பேரில் குறைந்தபட்சம் 70 நாட்களுக்கு இஎஸ்ஐ பங்களிப்பு இருக்க வேண்டும்.

இதுதவிர, இ.எஸ்.ஐ, திட்டத்தின்கீழ் ஒரு தொழிலாளி நோய் காரணமாக விடுப்பில் இருக்கும் காலத்தில் மருத்துவரால் சான்று அளிக்கப்படும்பட்சத்தில், தனது தினசரி ஊதியத்தில் 70 சதவீதத் தொகையை ஊதிய இழப்பாகப் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு ஓராண்டில் அதிகபட்சம் 91 நாட்களுக்குப் பெற இயலும். மேலும், ஒரு தொழிலாளி எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும்பட்சத்தில், ஈமச்சடங்கு செலவாக குடும்ப உறுப்பினருக்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது.

மேலும், 'அடல் பிமிட் வியாகி கல்யாண் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் கரோனாவால் ஒருவர் வேலையை இழந்தால் நிவாரணம் அளிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மண்டலத்தில் இதுவரை 512 பேருக்கு மொத்தம் ரூ.61.17 லட்சம் நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை www.esic.nic.in என்ற இணையதளத்திலும், அருகில் உள்ள இ.எஸ்.ஐ.சி கிளை அலுவலகத்தை அணுகியும் தெரிந்துகொள்ளலாம் அல்லது 0422-2314430, 2362329 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம்’’.

இவ்வாறு கே.ரகுராமன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x