பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டிப் பொது இடங்களில் விநாயகர் சிலை அமைத்து வழிபட அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்து முன்னணிச் செயலர் குற்றாலநாதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

’’தமிழகம் முழுவதும் செப்.10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கரோனா பரவலைக் காரணம் காட்டி விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைக்கவும், கூட்டமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் விழா.

மக்கள் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டது.

எனவே, பொது இடங்களில் விநாயகர் சிலை அமைத்து வழிபடவும், ஊர்வலமாகச் செல்லவும் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, கரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செப்.10-ம் தேதி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அந்தச் சிலைகளை 12-ம் தேதி நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’’.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்குமாறு கோரப்பட்டது. அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in