

தங்கள் உரிமைகளுக்காக போராடும் மாற்றுத் திறனாளிகள் மீது காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மாதனூர் ஆத்தோரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 67 வயதான குப்புசாமி என்பவர் மயங்கி விழுந்துள்ளார். ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதுபோல சின்னசேலத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ராஜாராம் (40) என்பவரும் மயக்கமடைந்த நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தங்கள் உரிமைகளுக்காக போராடும் மாற்றுத் திறனாளிகள் மீது காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது ஜனநாயகத விரோதப் போக்கு மட்டுமல்லாது, மனிதாபிமானமற்ற செயலாகும். தமிழக அரசின் அலட்சியத்தால் அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மரணமடைந்த குப்புசாமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.