

பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப்கார் சேவை நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று முதல் தொடங்கியது. இதனால் பக்தர்கள் மூன்று நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமிதரிசனம் செய்யமுடியும்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவைரயில், ரோப்கார் ஆகியவை உள்ளன. கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தநிலையில் இரண்டாம் அலையின் போது கோயில் மூடப்பட்டிருந்தது.
இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில் திறக்கப்பட்டநிலையில், படிப்பாதை, யானைப்பாதை வழியாக மட்டும் பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள், முதியோர் அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து மின் இழுவை ரயில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்கப்பட்டது. இருந்தபோதிலும் ரோப்கார் இயக்கினால் மலைக்கோயிலில் பக்தர்கள் அதிகளவில் கூடநேரிடம் என்பதால் ரோப்கார் இயக்குவது தாமதமாகிவந்தது.
இந்நிலையில் சில தினங்களாக ரோப்கார் பராமரிப்பு பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை முதல் மலைக்கோயிலுக்கு ரோப்கார் மூலம் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து பக்தர்கள் மின்இழுவைரயிலில் பயணித்தநிலை தற்போது இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோப்கார் இயக்கப்பட்டதால் வயதானவர்கள், குழந்தைகள் எளிதில் மலைக்கோயில் செல்லமுடியும் என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.