Last Updated : 08 Sep, 2021 08:18 PM

 

Published : 08 Sep 2021 08:18 PM
Last Updated : 08 Sep 2021 08:18 PM

கோயில் இடத்தில் அமைத்த சாலையை 30 நாளில் அகற்றுக: ஓய்வுபெற்ற நீதிபதி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அறநிலையத் துறை அனுமதி பெறாமல் போடப்பட்ட சாலையை 30 நாளில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

ஓய்வுக்குப் பிறகு சொந்த கிராமமான பூலாங்குறிச்சியில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் கிராமத்தில் உருமான் சாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அறநிலையத் துறையிடம் அனுமதி பெறாமல் 225 அடி தூரத்திற்குத் தார்ச் சாலை அமைத்துள்ளனர். இந்த தார்ச் சாலையை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதிடுகையில், ''சாலை அமைக்கப்பட்டுள்ள இடம் வருவாய் ஆவணங்களில் கோயிலுக்குச் சொந்தமான இடம் என்றுள்ளது. அறநிலையத் துறையிடம் அனுமதி பெறாமல் சாலை அமைத்துள்ளனர்'' என்றார்.

அரசு வழக்கறிஞர் சுப்பாராஜ் வாதிடுகையில், ''கோயில் இடத்தில் அனுமதியில்லாமல் போடப்பட்ட தார்ச் சாலையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்'' என்றார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''உருமன் கோயில் இடத்தில் சாலை அமைத்துள்ளனர். இதற்கு அறநிலையத் துறையிடம் அனுமதி பெறவில்லை. இதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர். எனவே கோயில் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையை 30 நாளில் அகற்ற வேண்டும்'' என்று உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x